Ticker

6/recent/ticker-posts

Ad Code

நாட்டுமருத்து சாப்பிட்டு வீட்டிலேயே கருக்கலைப்பு... விபரீதமாய் பலியான பெண்..!

சென்னை அம்பத்தூரில் பிரசவத்திற்கு பயந்து கர்ப்பத்தைக் கலைக்க நாட்டு மருந்து உட்கொண்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பிரசவத்தில் அண்ணி உயிரிழந்த அச்சத்தால் பெண் மேற்கொண்ட  விபரீதக் கருக்கலைப்பு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு அம்பத்தூரை அடுத்த கொரட்டூர், பாரதி நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரதாப் உள்கா. இவரது மனைவி குமாரி கஞ்சக்கா . ஒடிசாவைச் சேர்ந்த இவர்கள் இருவரும் இங்கு தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தனர். குமாரி 7 மாத கர்ப்பிணியாக இருந்தநிலையில், கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஒடிசாவில் உள்ள குமாரியின் அண்ணி பிரசவத்தின்போது இறந்து விட்டதாக தகவல் வந்தது. இதையடுத்து அந்த இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பிரதாப் உள்கா- குமாரி கஞ்சக்கா தம்பதியினர் ஒடிசா சென்றுள்ளனர். அங்கு இறுதிச் சடங்கில் பங்கேற்ற குமாரியிடம் அவருடைய உறவினர்கள், கர்ப்பிணியின் இறப்பு குறித்தும், குழந்தை பிறக்கும் போது ஏற்படும் சிரமங்கள் குறித்தும் பேசியுள்ளனர். இதுபோல தானும் குழந்தை பிறக்கும் போது இறந்து விடுவோமோ என்று அஞ்சிய குமாரி, தனது வயிற்றில் வளர்ந்து வரும் கருவைக் கலைக்க முடிவு செய்துள்ளார். தனது கணவருக்குத் தெரிவிக்காமல் கருவைக் கலைப்பதற்கு தனது தோழியிடம் இதற்காக உதவி கேட்டுள்ளார். தோழியின் அறிவுரைப்படி அவருடைய சொந்த ஊரில் உள்ள ஒரு நபரிடம் சென்று கருக்கலைப்புக்கான நாட்டு மருத்தை வாங்கி உட்கொண்டுள்ளார். இதுகுறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்காமலேயே இருந்து வந்துள்ளார். மருந்து சாப்பிட்டதில் இருந்தே குமாரிக்கு அவ்வப்போது உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத குமாரியின் உடல் நிலை கடந்த சில நாட்களாக மிகவும் மோசமடைந்துள்ளது. திடீரென அவருக்கு கடுமையான வயிற்று வலியுடன் சிறுநீரகப் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னரே தான் கருக்கலைப்புக்காக நாட்டுமருந்தை உட்கொண்டதாக குமாரி தனது கணவணிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது மனைவியை கொரட்டூர் ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை டாக்டர் பரிசோதித்து மருந்து மாத்திரைகளை வழங்கியுள்ளனர். இதையடுத்து குமாரியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் வழக்கம்போல தங்கள் வேலைகளை கவனிக்க தொடங்கியுள்ளனர். ஆனாலும் ஒருசில நாட்களிலேயே குமாரியின் உடல்நிலை மீண்டும் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஒருசில தினங்களுக்கு முன்பு வேலையில் இருந்த குமாரியின் கணவருக்கு, அவர்கள் தங்கி இருக்கும் வீட்டு உரிமையாளர் செல்போனில் தொடர்பு கொண்டு, குமாரி மூர்ச்சையுற்று மயங்கி கிடப்பதாகவும் உடனடியாக வந்து மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இதனால் பதறிப்போன பிரதாப் உடனடியாக வீட்டிற்கு வந்து, தனது மனைவியை வாகனம் மூலம் கே.எம்.சி. மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் குமாரியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாக கூறி உடனடியாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். ஆனாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை என அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குமாரியின் சகோதரி அளித்த புகாரின்பேரில் கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதாப் உள்காவிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கர்ப்பிணியான குமாரி கருகலைப்புக்கான நாட்டுமருந்தை வாங்கி சாப்பிட்ட சில நாட்களிலேயே வயிற்றில் இருந்த சிசு இறந்து விட்டதாகவும் ஆனால், இறந்த சிசு வெளியேறாமல் கடந்த 2 மாதத்திற்கு மேலாக வயிற்றிலேயே தங்கிவிட்டதால் கர்ப்பபை ரணமாகி இறப்புக்கு காரணமாக அமைந்து விட்டதாக விசாரணையில் தெரியவந்தது. மருத்துவரின் அறிவுரை இன்றி அக்கம்பக்கத்தினரின் அறிவுரை கேட்டு முன்பின் தெரியாத நபர்களிடம் சென்று நாட்டு மருந்து என்ற பெயரில் அவர்கள் கொடுக்கும் மருந்துகளை வாங்கி சாப்பிட்டதாலேயே குமாரி தன்னையும் தன்னுடைய வயிற்றில் வளர்ந்து வந்த சிசுவையும் அழித்துக் கொண்டதாகவும் போலீசார் வேதனை தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட குடும்பநல இணை இயக்குனர் டாக்டர் அமுதா, குமாரியின் கணவரான பிரதாப்பிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். குழந்தை இல்லையே என்று ஏக்கத்துடன் பலரும் தவம் இருக்க , வயிற்றில் வளர்ந்த பிள்ளைச் செல்வத்தை அழிக்க நினைத்து, தன்னையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் பிரசவம் குறித்த போதிய விழிப்புணர்வின்மையையே காட்டுகின்றது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments