நாம் தினமும் பல சவால்களைச் சந்திக்கிறோம். சில நேரங்களில் நாம் சோர்வடையும் போது, யாராவது சொல்லும் ஒரு சிறு வார்த்தை அல்லது நாம் படிக்கும் ஒரு வரி, நமக்குள் மிகப்பெரிய வெளிச்சத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், புகழ்பெற்ற எழுத்தாளர் சூசி காசெம் (Suzy Kassem) கூறிய ஒரு ஆழமான வாசகம் இது.
"Doubt kills more dreams than failure ever will."
(ஒரு மனிதனின் கனவுகளை அவனது தோல்விகள் அழிப்பதை விட, அவனுக்குள் எழும் சந்தேகமே அதிகம் கொல்கிறது.)
இந்த ஒரு வரி, நம்மில் பலரது வாழ்க்கையின் எழுதப்படாத பக்கங்களைப் பிரதிபலிக்கிறது. இது எவ்வளவு உண்மை என்பதை ஒரு சிறு நிகழ்வின் மூலம் பார்ப்போம்.

நிலா, கதிர் என இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். இருவருக்குமே நன்றாகப் புகைப்படம் எடுக்கும் ஆர்வம் இருந்தது. இருவருமே தங்களது மொபைல் போனில் மிக அழகாக இயற்கை காட்சிகளைப் படம்பிடிப்பார்கள். ஒருநாள், ஒரு பிரபல நாளிதழில் 'இயற்கை புகைப்படம்' குறித்த ஒரு போட்டி அறிவிக்கப்பட்டது. முதல் பரிசு பெறுபவர்களுக்குப் பெரிய தொகையும், பாராட்டும் காத்திருந்தன.
நிலா மிகவும் திறமைசாலி. அவள் எடுத்த புகைப்படங்கள் எல்லாமே அவ்வளவு தத்ரூபமாக இருக்கும். ஆனால், போட்டி அறிவிப்பைப் பார்த்ததும் அவளுக்குள் ஒரு சந்தேகம் எட்டிப்பார்த்தது. "நன்கு விலையுயர்ந்த கேமரா வைத்திருப்பவர்கள் எல்லாம் இதில் கலந்துகொள்வார்களே? மொபைல்போனில் நான் எடுத்த புகைப்படம் தேர்வாகுமா? ஒருவேளை நிராகரித்துவிட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? நமக்கு எதற்கு இந்த வீண் வேலை?" என்று நினைத்து, தனது புகைப்படத்தை அனுப்பாமலேயே விட்டுவிட்டாள்.
மறுபுறம் கதிர், தன்னிடம் இருந்த சாதாரண கேமராவில் எடுத்த ஒரு புகைப்படத்தை அனுப்பி வைத்தான். அவனுக்குத் தெரியும், தன்னை விடப் பல திறமையாளர்கள் வருவார்கள் என்று. ஆனால் முயற்சி செய்து பார்ப்போமே என்ற நம்பிக்கையில் அனுப்பினான்.
முடிவுகள் வந்தன. கதிர் நினைத்தபடியே அவனுக்கு முதல் பரிசு கிடைக்கவில்லை. ஆனால், அவனது புகைப்படத்தின் கோணம் வித்தியாசமாக இருந்ததால், நடுவர்கள் அவனுக்கு 'சிறப்பு ஆறுதல் பரிசு' வழங்கி, அவனது திறமையை இன்னும் எப்படி வளர்த்துக்கொள்ளலாம் என சில ஆலோசனைகளையும் வழங்கினர்.
இப்போது யோசித்துப் பாருங்கள்... கதிர் முதல் பரிசைத் தவறவிட்டான். ஆனால் அந்தத் தோல்வி அவனுக்கு ஒரு புதிய பாதையைக் காட்டியது; அவனது நம்பிக்கையை வளர்த்தது. அடுத்த முறை இன்னும் சிறப்பாகச் செயல்பட அவனுக்கு ஒரு பாடம் கிடைத்தது. ஆனால் நிலா? அவள் களத்திலேயே இறங்கவில்லை. அவளுக்குத் தோல்வியே ஏற்படவில்லை. ஆனால், "நம்மால் முடியுமா?" என்ற சந்தேகம், அவளது திறமையையும், அவளது வெற்றிப் பயணத்தின் முதல் படியையும், அவளது கனவையும் முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டது.
தோல்வி என்பது ஒரு முற்றுப்புள்ளி அல்ல; அது ஒரு காற்புள்ளி. தோல்வி நமக்கு பாடம் கற்பிக்கும். ஒருவேளை நாம் நினைத்ததில் தோற்றுப்போனால், "இப்படிச் செய்தால் தோற்றுப் போவோம்" என்ற படிப்பினையாவது நாம் கற்றுக்கொள்வோம்.

ஆனால், சுய சந்தேகம் என்பது ஒரு கண்ணுக்குத் தெரியாத சிறைச்சாலை. இது நம்மை எந்த முயற்சியும் செய்ய விடாமல், ஒரே இடத்திலேயே முடக்கிப் போட்டுவிடும். உலகத்தில் எத்தனையோ அற்புதமான புத்தகங்கள் எழுதப்படாமலேயே போனதற்கும், பல புதுமையான தொழில்கள் தொடங்கப்படாமலேயே போனதற்கும் காரணம் திறமையின்மை அல்ல; "ஒருவேளை தோற்றுவிடுவோமோ?" என்ற சந்தேகம்தான்.
உங்கள் மனதில் ஒரு அழகிய கனவு இருக்கிறதா? ஒரு புதிய கலையைக் கற்க வேண்டும், சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும், அல்லது நீண்ட நாட்களாகத் தயங்கிக் கொண்டிருக்கும் ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா?
இன்றே முதல் படியை எடுத்து வையுங்கள். உங்கள் மீது நீங்களே வைக்கும் சந்தேகத்தை முதலில் குப்பையில் வீசுங்கள். தோற்றால் என்ன நடக்கும்? அதிகபட்சம் ஒரு அனுபவம் கிடைக்கும். ஆனால், சந்தேகப்பட்டு முயற்சியே செய்யாமல் விட்டால், வாழ்நாள் முழுவதும் "அன்றைக்கே செய்திருக்கலாமோ" என்ற குற்ற உணர்ச்சி மட்டுமே மிஞ்சும்.
தோல்விகளைச் சந்திக்கத் தயாராகுவோம்; சந்தேகங்களை விட்டொழிப்போம். கனவுகள் மெய்ப்பட இன்றைய நாள் ஒரு சிறப்பான தொடக்கமாக அமையட்டும்!
from Vikatan Latest news
0 Comments