ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்ஹா பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் அம்மாள் (70). கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வரும் ஆறுமுகம் அம்மாளை அவரது மூத்த மகள் செல்வம் என்பவர் பராமரித்து வருகிறார். கடந்த 16-ம் தேதி இரவு ஆறுமுகத்திற்கு இரவு உணவு கொடுத்துவிட்டு தனது வீட்டிற்கு சென்றுவிட்டார் செல்வம்.
மறுநாள் காலை செல்வம் வீட்டிற்கு வந்து பார்த்த போது அவரது தாயார் ஆறுமுகம் காது மற்றும் மூக்கில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். மேலும் ஆறுமுகம் அணிந்திருந்த அரை பவுன் தங்க தோடுகளும் காணாமல் போயிருந்தன. இச்சம்பவம் குறித்து ஏர்வாடி தர்ஹா போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளியை தேடி வந்தனர்.


இந்நிலையில் அப்பகுதியில் நிறுவப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் ஆறுமுகம் வீட்டின் வேலி வழியாக அடையாளம் தெரியாத நபர் வந்து சென்றது பதிவாகியிருந்தது. இதையடுத்து அந்த நபரை தேடும் பணியில் ஈடுபட்ட போலீஸார், சத்திரக்குடி பகுதியில் பதுங்கியிருந்த கொலையாளியை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் மதுரை அரிட்டாபட்டியில் வசித்து வந்த மோகன் என்பதும், ஆறுமுகத்தின் வீட்டருகே நடந்த பேருந்து நிழற்குடை கட்டுமான பணியில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது. மேலும் மூதாட்டி ஆறுமுகத்திடம் ரூ 10 ஆயிரம் கடன் வாங்கியிருந்த மோகன், அதனை திருப்பி கொடுக்காமல் மேலும் கடன் கேட்டு சென்றுள்ளார். அப்போது மூதாட்டி ஆறுமுகம் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மோகன், மூதாட்டி ஆறுமுகத்தின் கழுத்தை நெரித்து கொலை செய்ததுடன் அவர் அணிந்திருந்த அரை பவுன் தோடையும் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து மோகனை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.
from Vikatan Latest news
0 Comments