ஒருமுறை திருநெல்வேலியை ஒட்டிய கிராமங்களில் கடும் வறட்சி நிலவியது. அதன் காரணம் அறிந்துகொள்ள மக்கள் கோரக்க சித்தரைச் சரணடைந்தனர். அவரும் தன் ஞானதிருஷ்டியால் ஒரு மாபெரும் உண்மையைக் கண்டடைந்தார்.
சிவபெருமான் மீது கோபம் கொண்டான் தட்சன். அவரை அழைக்காமலும் அவருக்கு உரிய அவிர்பாகத்தை அளிக்காமலும் மாபெரும் யாகம் நடத்தினான். அதனால் கடும் சீற்றத்துக்கு ஆளான சிவபெருமான் தட்சனையும் யாகத்தையும் அழித்தார்.
யாகத்தில் கலந்துகொண்டோரும் தண்டனைக்கு ஆளானார்கள். அக்னி பகவானும் அவருடைய ஆட்டு வாகனமும்கூட தண்டனையிலிருந்து தப்ப இயலவில்லை.

தட்ச யாகம் அழிந்தும் சினம் தணியாத ஈஸ்வரன், பரதக் கண்டத்தின் தென்பகுதியில் - நெல்லைச் சீமையில் தாமிரபரணிக் கரையில் உள்ள மேலநத்தம் எனும் தலத்தை அடைந்து உக்கிரத்துடன் அமர்ந்தார்.
அவருடைய உக்கிர வெம்மை தாமிரபரணியின் மறுகரையில் உள்ள கருங்காடு வரை வீசியது. ஆகவேதான் மேலநத்தம், கரிக்காதோப்பு, கருங்காடு, கரிசூழ்ந்தமங்கலம் முதலான கிராமங்களில் வறட்சியும் பஞ்சமும் ஏற்பட்டன.
இதை அறிந்த சித்தர் அவரைச் சாந்தப்படுத்த முயன்றார். மேலநத்தத்துக்கு நேர் எதிரேயுள்ள கருப்பந்துறையில், கிழக்கு முகமாக ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். அந்த இறைவன் `அழியாபதி ஈஸ்வரர்’ என்று திருப்பெயர் கொண்டார்.
அதேபோல், சித்தர்கள் அனைவரும் பெளர்ணமி தினத்தில் ஒன்றுகூடி மேலநத்தம் அக்னீஸ்வரருக்கும் அபிஷேக ஆராதனைகளுடன் பூஜைகள் நடத்தினர். அக்னீஸ்வரர் சாந்தமானார். இன்றும் அனைவருக்கும் அனைத்து நன்மைகளையும் வழங்கும் சுவாமியாய் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
அக்னிதேவன் இங்கு வந்து வழிபட்டு விமோசனம் பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது. இதையொட்டி, மேலநத்தம் தலத்தில் அக்னி பகவானின் வாகனமான ஆட்டுத் தலையுடன் காட்சி தருகிறாராம் நந்தி பகவான்.

இங்ஙனம், சிவபெருமானின் உக்கிரத்தைத் தணிக்கும் வகையிலான முயற்சியில் இறங்கிய சித்தர்களும் முனிவர்களும் கருங்காடு கிராமத்திலும் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார்கள்.
வெம்மையைப் பரவ விடாமல் தடுக்கும் வேண்டுதலோடு எழுந்தருள் செய்யப்பட்ட அந்த சுவாமி, `பரவா எல்லை நாதர்’ என்று திருநாமம் கொண்டார்.
தற்போதும் இவர் வெம்மை - வறட்சியை மட்டுமல்ல, பெருந்தொற்று போன்ற கொடும் பிணிகளும் அதிகம் பரவாமல் அருள்செய்து வருகிறார் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.
இந்தக் கோயிலில் லிங்க வடிவில் கோரக்கரும் தனிச் சந்நிதி கொண்டுள்ளார். இவரை வணங்கி வழிபட்டால் சகல இன்னல்களிலிருந்தும் நம்மைப் பாதுகாப்பார். தாமிரபரணியின் நீர்ப்போக்கு இவ்வூர் எல்லையில் சிறப்புடன் அமைந்துள்ளது.
இவ்வூரில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாயும் தாமிரபரணி நதி, இவ்வூரின் முடிவில் இடப்பக்கம் திசைமாறி தெற்கு வடக்காகப் பாய்கிறாள்.
இவ்வூரைச் சுற்றி ஏறக்குறைய ஓர் ஆரம் போன்று இந்த நதி பாய்வது விசேஷ அம்சமாகும். தன்னுடைய தீரத்தில் வேறெந்த தலத்திலும் இப்படியான விசேஷ அமைப்புடன் தாமிரபரணி பாயவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் கரையில் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது அருள்மிகு பரவா எல்லைநாதரின் ஆலயம். ஒரு காலத்தில் பிரமாண்டமாகத் திகழ்ந்த இந்த ஆலயம், வெள்ளப் பெருக்கில் சிதைந்து போனதாம்.
பிற்காலத்தில் உள்ளூர் சிவனடியார்கள் ஒன்றிணைந்து தற்போதுள்ள கோயிலைப் பராமரித்து வழிபாடுகள், விழா வைபவங்களைச் சிறப்புற நடத்தி வருகிறார்கள்.
இங்கு வந்து வேண்டிக்கொண்டால் விரைவில் திருமண வரம் கைகூடும் என்கிறார்கள்.
காசிக்கு நிகரான தலம் இது எனப் போற்றும் அன்பர்கள், இவ்வூர் இறைவனை காசி விஸ்வநாதர் என்றும் அம்பாளை விசாலாக்ஷி என்றும் அழைத்து வழிபடுகிறார்கள். ஆக, காசிப் புண்ணியம் அருளும் தலமாகவும் விளங்குகிறது இவ்வூர்.
வறுமையில் வாடும் அன்பர்கள் இங்கு வந்து இந்த வழிபட்டால், விரைவில் வறுமை நீங்கும்; இல்லத்தில் செல்வம் செழிக்கும். விவசாயத்தில் நட்டம் ஏற்படுபவர்கள் எங்கள் ஈசனை வழிபட்டால் பாதிப்புகள் நீங்கி நல்ல மகசூல் பெறலாம்.
பிணிகள் தீரவும் அருள்புரியும் மகேசன் இவர் என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.
from Vikatan Latest news
0 Comments