திண்டுக்கல் மாவட்டம் குஜிலியாம்பாறை தாசில்தார் அய்யாசாமி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குஜிலியாம்பாறை வருவாய் கிராமங்களில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களைச் சேகரித்து தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்தச் சுற்றறிக்கை சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதோடு பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. அதே நேரத்தில் வருகிற 20 ஆம் தேதியன்று குஜிலியாம்பாறை தாசில்தார் அய்யாசாமியைக் கண்டித்து சிபிஎம் கட்சி தலைமையில் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும் அக்கட்சி சார்பில் அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இந்தப் போராட்டத்தை முடக்குவதற்காகவே தாசில்தார் இந்த மாதிரியான ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டிருக்கிறார் என சிபிஎம் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சிபிஎம் கட்சியின் வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, “ராவுத்தான்பட்டியில் 1 ஏக்கர் 20 செண்ட் நிலம் பட்டியலின மக்களுக்காகக் கொடுக்கபட்டிருந்தது. இந்த நிலத்திற்கு அருகிலேயே மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த நந்தகுமார் கட்டுமான பணிகளைச் செய்து வருவதோடு, பட்டியலின மக்களுக்குச் சொந்தமான நிலத்தையும் ஆக்கிரமித்தார்.
இது குறித்து தாசில்தார் அய்யசாமியிடம் புகாரளித்தபோது, ’நீங்கள் வேண்டுமானால் அந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள்” எனத் திமிராகப் பேசியிருக்கிறார்.

இது தொடர்பாக என் கவனத்திற்கு வந்து நானும் கட்சி தோழர்களும் புகாரளிக்க அலுவலகத்திற்கு வந்தபோது, எங்களை வழிமறித்த தாசில்தார் அய்யாசாமி, ’பொதுமக்கள் மட்டுமே உள்ளே வர வேண்டும். மக்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. அரசியல் கட்சிகளை எனக்கு பிடிக்காது. இங்கு நீங்கள் வரக்கூடாது’ என எங்களிடமும் திமிராகப் பேசினார். இது தொடர்பாக அங்கேயே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரவுத்தான்பட்டி சிபிஎம் கட்சியின் கிளை செயலாளர் ராசுக்குமாரும் பொதுமக்களும், நந்தகுமாரிடம் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு முறையிட்டபோது, நந்தகுமார் தரப்பினர் ராசுக்குமாரை அடித்துள்ளனர்.
உடனே ராசுக்குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தங்களையும் அடித்து விட்டதாக பொய் புகார் கூறி நந்தகுமார் தரப்பினர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பிலும் காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். தாசில்தார் நந்தகுமாரைக் கண்டிக்காமல் விட்டதானலேயே பிரச்னை இந்த அளவிற்குத் தீவிரமாகியுள்ளது என்பதால் தாசில்தாரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக கட்சி சார்பில் அறிவித்திருந்தோம். இதை முடக்குவதற்காகவே அய்யசாமி இப்படியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்” என்றார்.
from Vikatan Latest news
0 Comments