Doctor Vikatan: எனக்கு அடிக்கடி வாய்ப்புண் வருகிறது. சூடான உணவுகளைச் சாப்பிடவே முடிவதில்லை. இதற்கு என்ன காரணம்... வாய்ப்புண், புற்றுநோயாக மாற வாய்ப்பு உண்டா?
பதில் சொல்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர்.

கையிலோ, காலிலோ புண் ஏற்பட்டால் அதற்கு மருந்து போட்டு, கட்டுபோட்டு ஆறும் வரை காத்திருக்கலாம். வாய்ப்புண்ணுக்கு அப்படிச் செய்ய முடியாது. சாப்பிடும்போதும் பேசும்போதும் வலிக்கும், மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும்.
ஆஃப்தஸ் அல்சர் (Aphthous ulcer) எனப்படும் சாதாரண வாய்ப்புண்கள்தான் 90 சதவிகிதம் பாதிப்பவை. இத்தகைய சாதாரண வாய்ப்புண்கள் குழந்தைப்பருவத்திலேயேகூட தொடங்கலாம்.
20 அல்லது 25 சதவிகித மக்களுக்கு நிச்சயமாக வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ இது வரும். இந்தப் புண்கள் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் தானாகவே சரியாகிவிடும். அரிதாகச் சிலருக்கு மட்டும் ஒரு செ.மீ அளவு பெரியதாகலாம். அந்தப் புண் ஆறுவதற்குச் சில வாரங்கள் அல்லது சில மாதங்கள்கூட எடுக்கலாம்.

சாதாரண வாய்ப்புண்கள் ஏன் அடிக்கடி சிலருக்கு வருகின்றன என்ற கேள்வி பலருக்கும் உண்டு. வேகமாகச் சாப்பிடும் போது நாக்கையோ, கன்னத்தின் உட்புற சதையையோ கடித்துக் கொள்வது, நேரமின்மை காரணமாக வேகமாகவோ முரட்டுத்தனமாகவோ பல் தேய்ப்பது, இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி12, ஃபோலிக் ஆசிட் குறைபாடு,
கோணலான பற்களைச் சரிசெய்ய கம்பி போட்டு அதில் கூர்மையான சில பகுதிகள் வாயில் குத்துவது, மன அழுத்தம், சிலவகை டூத் பேஸ்ட்டுகளில் காணப்படும் SLS எனப்படும் ரசாயனம், சிலவகை டூத் பேஸ்ட்டுகள், மரபணு போன்றவை இந்தப் புண்களுக்குக் காரணமாகலாம். சில பெண்களுக்கு மாதவிடாய் வருவதற்கு முன் இப்படி வாய்ப்புண்கள் வரலாம்.
வருடத்திற்கு ஓரிரு முறை வந்து ஓரிரு வாரங்களில் குணமாகும் வாய்ப்புண்ணுக்கு மருத்துவரைப் பார்க்கத் தேவை இல்லை. வாய்ப்புண் வந்த நேரத்தில் காரமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மென்மையான டூத் பிரஷ் உபயோகிக்க வேண்டும்.
ஆன்டிசெப்டிக் மவுத் வாஷ் அல்லது உப்புத் தண்ணீரில் ஒரு நாளைக்கு இரண்டு முறை வாய்க் கொப்பளிக்கலாம். அடிக்கடி வரும் வாய்ப்புண்களுக்கும், 55 வயதிற்கு மேல் குறிப்பாக, புகையிலைப் பழக்கம் உள்ளவர்களுக்கு மூன்று வாரங்கள் ஆகியும் ஆறாத வாய்ப்புண்கள் (புற்றுநோயாக இருக்கலாம்) இருந்தாலும் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

சாதாரண வாய்ப்புண்கள் பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஆனால், வேறுவிதமான வாய்ப்புண்கள் சிலரைப் பாதிக்கலாம்.
அதாவது மேற்குறிப்பிட்டபடி வாயில் புற்றுநோய் புண், த்ரஷ் (Thrush) எனப்படும் பூஞ்சை நோய்ப் புண் போன்றவை. த்ரஷ் என்பது ஆன்டிபயாட்டிக் சாப்பிட்டபின் வரலாம். ஆஸ்துமா நோய்க்கான ஸ்டீராய்டு இன்ஹேலரை (Steroid Inhaler) சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால் வரலாம்.
இது வாயின் ஓரத்தில் ஒரு வெடிப்பாகவும் (angular cheilitis ) ஏற்படலாம். இதற்கு ஆன்டிஃபங்கஸ் ஆயின்மென்ட் அல்லது மாத்திரை தேவைப்படும். செரிமான மண்டலம் (digestive system) வாயிலிருந்து ஆசன வாயில் வரை உள்ளது. செரிமான மண்டல பிரச்னைகள் ( Crohn's Disease, Coeliac Disease etc) இருந்தால்கூட வாயில் புண் ஏற்படலாம். இவற்றில் வாய்ப்புண்ணோடு செரிமான பிரச்னைகளும் இருக்கும்.
உங்கள் மருத்துவர் ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட சில பரிசோதனைகளில் இதைக் கண்டுபிடித்து குடல், இரைப்பை மருத்துவரைப் பார்க்கச் சொல்வார். எய்ட்ஸ் உள்ளிட்ட அரிதான காரணங்களாலும் இப்படிப்பட்ட அசாதாரண வாய்ப்புண்கள் வரலாம்.
அடிக்கடி வாய்ப்புண் வருபவர்களுக்கு ரத்தப் பரிசோதனை அவசியம். முக்கியமாக இரும்புச்சத்து, வைட்டமின் சத்துகள், CRP, ESR போன்ற குடல் வீக்கக் குறியீடுகள் சரியாக உள்ளனவா என்று பார்க்க வேண்டும். செரிமான கோளாறுகளும் சேர்ந்திருந்தால் மலப் பரிசோதனை செய்து Calprotectin குடல் வீக்க குறியீடு சரியாக உள்ளதா என்று மருத்துவர் பார்ப்பார்.
புற்றுநோயாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டால் திசுப் பரிசோதனை (biopsy) தேவைப்படும். வாய்ப்புண்களால் வலி அதிகமாக இருந்தால் இரண்டாம்கட்ட மருந்துகள், மூன்றாம்கட்ட மருந்துகள் உள்ளன.

வாய்ப்புண்கள் வராமல் தடுக்க, நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது ஒரு நல்ல டூத் பிரஷ் வைத்து பல் துலக்க வேண்டும். சத்துக்குறைவு ஏற்படாமல் இருக்க நிறைய பழங்களும் காய்கறிகளும் சாப்பிட வேண்டும். வருடத்திற்கு ஒரு முறையாவது பல் டாக்டரைப் பார்த்து பல் சுகாதாரத்தைப் பேண வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Vikatan Latest news
0 Comments