Ticker

6/recent/ticker-posts

Ad Code

"உங்க மகள் சாவதைப் பாருங்க" - மனைவியைத் தூக்கில் தொங்கவிட்டு மாமனாருக்கு வீடியோ காலில் காட்டிய கணவன்

கர்நாடகா மாநிலம் பாகல்கோட் என்ற இடத்திற்கு அருகில் உள்ள பிலாகி என்ற இடத்தைச் சேர்ந்தவர் பாக்யஸ்ரீ(23). இவரது கணவர் பிரவீன். டிரைவராக வேலை செய்து வருகிறார். இதனால் அடிக்கடி வெளியூர்களுக்கு பயணம் செய்வார்.

கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதால் பாக்யஸ்ரீ தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று வசித்து வந்தார். ஆனால் சமீபத்தில்தான் பிரவீன் தனது மனைவியைச் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார். ஆனாலும் கணவன், மனைவி இடையே சண்டை ஓயவில்லை.

பாக்யஸ்ரீயின் பெற்றோர் வசிக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள ஒருவருடன் பாக்யஸ்ரீக்குத் திருமணம் தாண்டிய உறவு இருப்பதாக பிரவீன் சந்தேகப்பட்டார்.

பாக்கியஸ்ரீ, பிரவீன்
பாக்கியஸ்ரீ, பிரவீன்

இது தொடர்பாகத்தான் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் இருவருக்கும் இடையே இதே பிரச்னையில் சண்டை ஏற்பட்டது. இதில் பிரவீன் தனது மனைவியை மரக்கட்டையால் அடித்தார். இதில் காயம் அடைந்த பாக்யஸ்ரீயை துப்பட்டாவில் கட்டி மின் விசிறியில் தூக்கில் தொங்கவிட்டார் பிரவீன்.

தூக்கில் பாக்யஸ்ரீ உயிருக்குப் போராடியபோது பிரவீன் வீடியோ கால் மூலம் பாக்யஸ்ரீயின் பெற்றோரைத் தொடர்பு கொண்டார். அவர், ''பாக்யஸ்ரீ உயிருக்குப் போராடுவதைப் பாருங்கள்'' என்று தனது மனைவியின் பெற்றோரிடம் காட்டினார். அவர்கள் தங்களது மகள் தங்களது கண்முன்பாக உயிரிழப்பதைப் பார்த்து எதுவும் செய்ய முடியாமல் கதறி அழுதனர்.

பாக்யஸ்ரீ உயிருக்குப் போராடி இறந்த காட்சிகளை வீடியோ எடுத்து அதனை தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் அனுப்பி வைத்தார் பிரவீன்.

இது குறித்து பாக்யஸ்ரீயின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரவீனைக் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் இரும்பு தடி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதோடு பீர் பாட்டில்களும் கிடந்தன. எனவே பாக்யஸ்ரீக்கு பிரவீன் பீர் குடிக்க கொடுத்தாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இது தெரிய வரும் என்று போலீஸார் தெரிவித்தனர். இருவரும் 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.



from Vikatan Latest news

Post a Comment

0 Comments