Doctor Vikatan: எப்போதும் எதிர்மறை எண்ணங்கள் மனதை ஆக்கிரமிக்கின்றன. அதிலிருந்து விடுபட எவ்வளவு முயற்சி செய்தாலும் முடியவில்லை. இதனால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. இதற்குத் தீர்வுதான் என்ன?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் மிதுன் பிரசாத்

மனநல மருத்துவர் மிதுன் பிரசாத்
மனநல மருத்துவர் மிதுன் பிரசாத்

தேவையற்ற அல்லது எதிர்மறையான எண்ணங்கள் அதிகமாகத் தோன்றினால், அது 'ஓசிடி' எனப்படும் 'அப்சசிவ் கல்பல்சிவ் டிஸ்ஆர்டர்' ( Obsessive-Compulsive Disorder) போன்ற ஏதேனும் ஒரு பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். அதாவது, நாம் எந்தவொரு விஷயத்தைப் பற்றி நினைக்கக்கூடாது அல்லது யோசிக்கக்கூடாது என்று கருதுகிறோமோ, அந்த விஷயம் நம் கட்டுப்பாட்டையும் மீறி மீண்டும் மீண்டும் நம் மனதிற்குள் வந்துகொண்டே இருப்பதைத்தான் நாம் விரும்பாத, நம்மை பயமுறுத்தும் எண்ணங்கள் (Intrusive Thoughts) என்கிறோம்.

உங்களுக்குத் தோன்றும் எதிர்மறை எண்ணங்கள் (Negative thoughts) இதன் அறிகுறியாகவும் இருக்கலாம். 'நாம் ஏன் உண்மையில் உயிரோடு இருக்கிறோம்?', 'நாம் ஏன் இந்த வாழ்க்கையை வாழ வேண்டும்?', 'நாம் ஏன் இது போன்ற சூழ்நிலைகளையெல்லாம் எதிர்கொள்ள வேண்டும்?' என்பன போன்ற எதிர்மறையான சிந்தனைகள் தோன்றலாம்.

இந்த இரண்டு நிலைகளுக்குமே முறையான சிகிச்சைகள் உள்ளன. இந்தப் பாதிப்புகளின் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சை மாறுபடும். தங்களுக்கு இருக்கும் பாதிப்பு மிகவும் லேசானதாக இருந்தால், வெறும் மனநல ஆலோசனையே (Counseling) போதுமானது.

ஒருவேளை, அந்த எண்ணங்கள் அடிக்கடி தோன்றி, அன்றாட வேலைகளில் உங்களால் கவனம் செலுத்த முடியாமலோ அல்லது தினசரி  வேலைகளைச் செய்ய விடாமல் தடுத்தாலோ, அதற்கென பிரத்யேக மாத்திரைகள் உள்ளன. மருத்துவர் பரிந்துரைக்கும் குறிப்பிட்ட கால அளவிற்கு (சில மாதங்கள் மட்டும்) அந்த மருந்துகளை எடுத்துக்கொண்டு, பின்னர் அதனை முழுமையாக நிறுத்திக் கொள்ளலாம்.

எதிர்மறை எண்ணங்கள் அழுத்தும்போது, அவற்றிலிருந்து விடுபட சில விஷயங்களைச் செய்யலாம்.  மூச்சுப் பயிற்சி  செய்யலாம்.

6 விநாடிகள் மூச்சை மிகவும் மெதுவாக உள்ளே இழுக்க வேண்டும். இழுத்த மூச்சை 4 விநாடிகள் அப்படியே உள்ளே நிறுத்தி வைக்க வேண்டும். 8 விநாடிகளுக்கு மூச்சை மெதுவாக வெளியே விட வேண்டும்.

அதாவது, சாதாரணமாக அமர்ந்து கொண்டு, கைகளைப் பக்கவாட்டில் வைத்து, கண்களை மூடிக்கொள்ள வேண்டும். 6 விநாடிகள் மூச்சை மிகவும் மெதுவாக உள்ளே இழுக்க வேண்டும்.  இழுத்த மூச்சை 4 விநாடிகள்  அப்படியே உள்ளே நிறுத்தி வைக்க வேண்டும். 8 விநாடிகளுக்கு மூச்சை மெதுவாக வெளியே விட வேண்டும்.

6-4-8 என்ற இந்த வரிசையை உங்களால் எவ்வளவு மெதுவாகச் செய்ய முடியுமோ, அவ்வளவு மெதுவாகச் செய்ய வேண்டும். இதே முறையில் தொடர்ந்து 5 முறை இந்தப் பயிற்சியை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்.

காலையில் தூங்கி எழுந்தவுடன், வெறும் வயிற்றில் இந்த 'பாக்ஸ் ப்ரீதிங்' (Box Breathing) சுவாசப் பயிற்சியைச் செய்யலாம். (அதாவது 6 விநாடிகள் மூச்சை உள்ளே இழுப்பது, 4 விநாடிகள் அடக்குவது, 8 விநாடிகள் வெளியே விடுவது என இதனை ஐந்து முறை செய்ய வேண்டும்).
மனதில் தேவையில்லாத எண்ணங்கள் தோன்றினால், 'அவை வரட்டும், வந்துவிட்டுப் போகட்டும்' என்று எவ்வித அழுத்தமும் இன்றி, மனதை ஃப்ரீயாக  விட்டுப் பழகுங்கள். அதற்கு முக்கியத்துவம் கொடுக்காத பட்சத்தில் அதனால் உங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  



from Vikatan Latest news