Ticker

6/recent/ticker-posts

Ad Code

செங்கல்பட்டு: 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு - கோயில் குளத்தில் குளித்தபோது நேர்ந்த சோகம்

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகிலுள்ள சாத்தாங்குப்பம் பகுதியை சேர்ந்த விஜய்(19) என்ற கல்லூரி மாணவர், உடல்நிலை சரியில்லாமல் திருப்போரூரிலுள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருக்கும் தன்னுடைய தாயை பார்ப்பதற்காக நேற்று (28.11.2022) காலை வந்திருக்கிறார். உடன், உறவுக்கார சகோதரர்களான முகேஷ்(18), உதயகுமார் (20) ஆகியோர்களையும் அழைத்து வந்திருக்கிறார். மூன்று பேரும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து இருந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம்

இந்நிலையில், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் மடத்திற்கு எதிரே உள்ள குளத்தில் குளித்துவிட்டு துணிகளை துவைத்துக் கொண்டு வருவதாக உறவினர் வீட்டில் சொல்லிவிட்டு, காலை 10.30 மணிப்போல் கிளம்பி இருக்கின்றனர். மூவரும் குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது, ஒரு இளைஞர் குளத்தில் உள்ள சேற்றில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளார். அப்போது உடனிருந்த இரண்டு இளைஞர்களும் அவரை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால், எதிர்பாராத விதமாக மூன்று பேரும் குளத்தில் மூழ்கி சேற்றில் சிக்கி உயிரிழந்திருக்கின்றனர். 

மதியம் அந்த பக்கம் சென்ற ஊர்க்காரர்கள் சிலர், குளத்தின் கரையில் இருக்கும் அந்த இளைஞர்களின் உடைகள், செல்போன்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தை பார்த்து சந்தேகமடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த திருப்போரூர் காவல்துறையினர், சிறுசேரி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், குளத்தில் மூழ்கிய இளைஞர்களை தேடி ஆரம்பித்துள்ளனர். மாலை சுமார் 5.30 மணியளவில், நீரில் மூழ்கிய இளைஞர்களின் உடல்களை உயிரிழந்த நிலையில் ஒன்றன்பின் ஒன்றாக  மீட்டுள்ளனர். 

உயிரிழப்பு

பின்னர், மூவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்துள்ளனர் காவல்துறையினர். ஒரே தெருவை சேர்ந்த உறவுக்கார சகோதரர்களான மூன்று இளைஞர்களும், குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



from Latest News

Post a Comment

0 Comments