Ticker

6/recent/ticker-posts

Ad Code

பெட்ரோல், டீசல் விலை விவகாரம்: ``பிரதமர் மோடி கூறியது தவறான தகவல்" - மம்தா பானர்ஜி பதில்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொளி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். அந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி பெட்ரோல், டீசல் விலை குறித்தும் குறிப்பிட்டார். அப்போது அவர், ``மத்திய அரசு, கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. மாநிலங்கள் வாட் வரியை குறைக்க கோரிக்க வைத்தோம். எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்கவில்லை. அதனால் மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே உடனடியாக வாட் வரியைக் குறைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" எனப் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

முதல்வர்கள் கூட்டத்தில் மோடி

இந்த நிலையில், இதற்குப் பதிலளிக்கும் விதமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம், "பிரதமர் மோடியின் இன்றைய காணொளி சந்திப்பு முற்றிலும் ஒருதலைபட்சமானது, அவர் பகிர்ந்துகொண்ட தகவல்கள் தவறானவை.

மேற்கு வங்க மாநிலம் பெட்ரோல், டீசலுக்கு மானியமாக லிட்டருக்கு ரூ.1 வழங்குகிறோம். அதனால் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.1,500 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது குறித்து அந்த காணொளியில் பேசுவதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் அதில் பிரதமர் மட்டுமே பேச முடியும். அதனால் அவரின் தவறான தகவலை எதிர்த்துப் பதிலளிக்க முடியவில்லை.

மம்தா பானர்ஜி

இன்னும் சொல்வதானால், அது கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான கூட்டம். அதில் எரிபொருள் விலை பற்றி பிரதமர் பேசாமல் இருந்திருக்கலாம். சரி, அது அவரது விருப்பம். எங்கள் சார்பாக எரிபொருள் விலையைக் குறைத்து மக்களைச் சிரமத்திலிருந்து மீட்க வேண்டும் எனப் பிரதமரிடம் கோரிக்கை வைக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.



from Latest News

Post a Comment

0 Comments