Ticker

6/recent/ticker-posts

Ad Code

`9 மாதக் குழந்தைக்கு ஹெல்மேட்'- பைக்கில் குழந்தையை அழைத்துச்செல்ல மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகள்

மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், ஒரு புதிய வரைவு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கையில், ``இருசக்கர வாகனத்தில் நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது 40 கி.மீ வேகத்தில்தான் செல்ல வேண்டும். 9 மாதம் முதல் நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பைக்கில் அழைத்துச் செல்லும்போது, குழந்தைகளுக்கும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருக்கிறது.

வரைவு அறிக்கை

அதேபோல, ``நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் தனியாக அழைத்துச் செல்லும்போது, அழைத்துச் செல்பவர்களையும், அந்த குழந்தையையும் இணைத்துப் பாதுகாப்பு பெல்ட் அணிந்திருக்க வேண்டும். பயன்படுத்தப்படும் பாதுகாப்பு உபகரணங்கள், நீடித்து உழைக்கக்கூடியதாகவும், எடை குறைவானதாகவும். பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

வெளியிடப்பட்டுள்ள இந்த வரைவு அறிக்கை குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துக்களும், யோசனைகளும் தெரிவிக்கும்படி, மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கேட்டுக்கொண்டிருக்கிறது. பொதுமக்களிடமிருந்து வரும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனையின் அடிப்படையில் இந்த திட்டத்துக்குச் செயல்வடிவம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் இந்த அறிவிப்புகள் நடைமுறைக்கு வருவது சாத்தியமானதா?

தேவநேயன்

இந்த திட்டம் குறித்து குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர் தேவநேயனிடம் பேசினோம். ``ஒன்பது மாத குழந்தைகள்கூட தலைக்கவசம் அணியவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. முதலில் இந்த வரைவு எந்த கள ஆய்வு, புள்ளிவிவரம் அல்லது பரிந்துரையின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்பது குறித்த தெளிவான விளக்கம் இல்லை. பைக்கில் செல்லும்போது அந்தக் குழந்தையை வைத்திருப்பவர்களும் தலைக்கவசம் அணிந்து, அந்த குழந்தையும் தலைக்கவசம் அணிந்து வந்தால் அந்த குழந்தை அசௌகரியமாகத் தான் உணரும்" என்றார்.

Also Read: குழந்தைகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமா... என்ன சொல்கிறது சட்டம்? #DoubtOfCommonman

மேலும், ``குழந்தைகள் சாலைகளில் பாதுகாப்பாகச் செல்வதை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியம். அதேவேளையில், சாலைகள் சரியானதாக உள்ளதா, அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் பாதுகாப்பாக உள்ளதா, என்பதை எல்லாம் முதலில் உறுதிப்படுத்தவேண்டும். அதற்குப் பிறகு குழந்தைகளுக்குத் தலைக்கவசம் அணிவது குறித்து பேசுவது சரியாக இருக்கும். ஒன்பது மாத குழந்தையை இருசக்கர வாகனத்தில் தனியாக அழைத்துச் செல்லுவது முதலில் பாதுகாப்பானதா? மருத்துவ ரீதியாக, போக்குவரத்து ரீதியாக விரிவான காரணங்களை எல்லாம் யோசித்துவிட்டே பின்னர் ஒரு முடிவுக்கு வரவேண்டும்" என்று பேசினார்.

குழந்தைகளுக்கு தலைக்கவசம்

மத்திய போக்குவரத்து அமைச்சகம் தற்போது கொண்டுவந்திருக்கிற இந்த வரைவு அறிக்கையில், ஒன்பது மாதக் குழந்தை முதல் நான்கு வயதுக் குழந்தை வரை இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது 40 கி.மீ வேகத்தில்தான் வாகனத்தை இயக்க வேண்டும் என்று கூறுவது மிகவும் வரவேற்கத்தக்கது. அதே வேளையில், ஒன்பது மாத குழந்தைகளுக்குத் தலைக்கவசம் அணியவேண்டும் என்று சொல்லியிருப்பதும் நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்று என்றே பல்வேறு தரப்பினரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.



from Latest News

Post a Comment

0 Comments