"எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த ஐந்து வருடத்தில் அசுர வளர்ச்சியில் பணக்காரர் ஆனது எப்படி?. இதைத்தான் அதிகாரிகள் கேட்கிறார்கள். இதில், எங்கு அரசியல் வருகிறது. உப்பு தின்றவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாகத் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும்" என்று அ.தி.மு.க நிர்வாகிகளைக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் டி.டி.வி தினகரன்.
![](https://gumlet.assettype.com/vikatan/2021-06/1b55eca1-c1c8-44ce-bd5a-8107df3535b0/60d64019e536b.jpg)
திருச்சி - கரூர் பைபாஸ் சாலையில் உள்ள ஜெயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரைச் சந்தித்து நலம் விசாரித்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டிவி தினகரன், அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது. `ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் டெல்லி பயணத்தின் நோக்கம் என்னவாக இருக்கும்?’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, "இதுகுறித்து நான் என்ன சொல்ல முடியும். அவர்களிடம்தான் கேட்க வேண்டும். அவர்கள் எதற்காக டெல்லி போனார்கள் என்று ஊருக்கே தெரிந்த விஷயம். அவர்கள் பாவம்" என்று சிரித்தார்.
![](https://gumlet.assettype.com/vikatan/2019-08/fe98d77a-616c-443e-9157-0a915e49e10f/MRV.jpg)
மேலும் அவர், ``அ.ம.மு.க தொடங்கப்பட்டதே அ.தி.மு.க-வை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதில், தேர்தல் வெற்றி, தோல்வி எல்லாம் எங்களுக்கு எந்தத் தடையும் ஏற்படுத்தவில்லை. ஏற்படுத்தவும் முடியாது. எங்கள் இலக்கை நோக்கி நாங்கள் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம்" என்றவரிடம், சசிகலா அ.தி.மு.க-வை மீட்டெடுப்பரா என்று கேட்டதற்கு, ``அ.தி.மு.க-வை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இருவரது முயற்சியுமே. அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது.
Also Read: முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு!
சுயநலத்திற்காக வந்தவர்கள், விலை போவார்கள். ஆனால் இவர்கள் அதையெல்லாம் தாண்டித்தான் ஒரு அரசியல் இயக்கம் செயல்படும். தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம், எங்கள் இலக்கை அடையும் வரை போராடுவோம்" என்றார்.
![](https://gumlet.assettype.com/vikatan/2019-12/b388d348-3f55-4867-8aaf-46652a54d486/ttv_latest_3.jpg)
`எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனைகள் நடந்து குறித்து என்ன நினைக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்குப் பதில் அளித்த தினகரன், "ஊழல் செய்தவர்கள் பலர் இருக்கிறார்கள். உப்பு தின்றவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாகத் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். சட்டப்படி எந்த நடவடிக்கை எடுத்தாலும் சரிதான். ஆனால் தி.மு.க வேண்டுமென்றே செய்வதாக முக்கிய நிர்வாகிகள் சொல்கிறார்கள். எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த ஐந்து வருடத்தில் அசுர வளர்ச்சியில் பணக்காரர் ஆனது எப்படி? இதைத் தான் அதிகாரிகள் கேட்கிறார்கள். இதில் எங்கிருந்து அரசியல் வருகிறது" என்றார்.
![](https://gumlet.assettype.com/vikatan/2021-07/5c37e597-1105-4933-90b3-d22c4e7b387d/60fb520f7795a.jpg)
`அரசியலிலிருந்து விலகிவிட்டதாகச் சசிகலா சொன்னாரே.. ஆனால் கட்சி நிர்வாகிகளிடம் விரைவில் வந்துவிடுவேன் என்கிறாரே?’ என்று கேட்டதற்கு, "இந்த கேள்வியை அவரைப் பார்க்கும்போது அவரிடம் நேரில் கேளுங்கள். அவரே பதில் சொல்வார்" என்றார்.
from Latest News
0 Comments